சிவசெந்தி மாலை

சிவசெந்தி மாலை

காட்டு வழி போனாலும் கள்ளர் பயமானாலும்
கேட்டுவழி காலனார் கிட்டுகிலும் - நாட்டமுடன்
நம்பிக்கையாக நமக்கு விநாயகர் தும்பிக்கையுண்டு துணை.


செந்திவாளர் நாயகனே சிவனே யுன்றன்
சீர்பாதம் போற்றிசெய்து சிறப்பாய்ப் பாட
வந்துதமிழ் வாக்கருளும் வாலைத் தாயே
மலரடியை நானடியேன் வருந்தி நித்தம்
தந்திரமாய் சடாட்சரத்தை த்யானஞ்செய்ய
சரஸ்வதியும் சாமுண்டி வீர வாகு
செந்தில்வாழ் விநாயகனே முருகா ஐய்யா
சீர்பாதம் என்னாளுஞ்சரணங் காப்பே. (1 )

ஈசன்மகிழ் பொதிகைமுனி குருவுமாகி
ஈராறு கைதனிலே வேலுமேந்திப்
பாசமுடன் மயிலேறி அசுரரை வென்று
பண்பான அமரருட துயரந் தீர்க்கும்
தேசிகனார் செந்தில்வடி வேலர் மீதில்
தீர்கமாய் ஐம்பத்தோர் கவிநான் சொல்ல 
மாசிலாப் பரஞ்சோதி ஒற்றைக் கொம்பன்
மலரடியை அனுதினமும் வணங்குவோமே. (2 )



காருகந்த மேனியனு மயனுங் காணார்
கடவுளர்க்கு உபதேச மருளு மூர்த்தி
வாருகந்த குவிமுலையாள் உமையாளீன்ற
வளர்மணியே செழுஞ்சுடரே மயிற் கடம்பா
தாருகந்த பனிரண்டு கையும் வேலும்
ஷண்முகனே உன்னிருதாள் சதங்கை கொஞ்ச
சீருகந்து எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (3 )

அயிலிலங்குஞ் செழுஞ்சேவற் கொடியும் வாளு
மாருசங்க சூலமழு அழகா யேந்தித்
துயிலிலங்கு மணிமார்பும் கடம்பா மாலுஞ்
சோதி யொத்த திருமேனி சுயம்ப்ரகாசம்
ஓயி லிலங்கு நடையழகு உனைக்கொண்டாட
உன்னிரு தாள் சதங்கைகொஞ்ச உமையாள் பாலா
செயிலிலங்க எனைக் காக்க ஐயா வா வா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (4 )

முத்துநவ ரத்தினமுடி யசையு முல்லை
முருவ லொரு கனிவாயு முகங்க ளாருஞ்
சத்துகுற மாதுவள்ளி தெய்வானை சூழ
மயில்சேவல் கொடியிலங்க அன்பு கூர்ந்து
எத்தேச காலமுந்தன் பாதம் போற்றி
எளியேன் நான் தொண்டனிட எனைநீ காக்க
சிற்றடியில் சிலம்பு கொஞ்ச ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (5 )

கஞ்சமல ரணியுந்திரூ உந்தி மார்புங்
காதிலிசை குண்டலமும் கையில் வேலும்
தஞ்சமென்றோர்க் கருள்புரியும் அமுத வாயுஞ்
ஷண்முகனே உன்னிருதாள் சதங்கை கொஞ்ச
அஞ்சலென்று வந்தடியேன் தன்னைக் காக்க
அழகான மயிலேறி அடியேன் முன்பு
கொஞ்சதங்கை கலகலென ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (6 )
 

பழம்பொருளே மனோன்மணியாள் ஈன்றெடுத்த
பாக்கியமே மெய்ஞான பவுசே வேதத்
தொழும்பொருளே இடைபின் கலை சுழியின் மீதில்
துலங்குநலம் புரிந்தருளும் சுவாமி நாதா
இளம்பொருளே வள்ளியம்மன் தெய்வயானை
இன்பசுக நாயகனே எளியேன் உள்ளச்
செழும்பொருளே என்குருவே சித்தே வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (7 )

விரிவுற்ற தோகைமயில் மீதிலேறி
வீரவாகு தம்பிமார் மிக்கவீரர்
அறிவுற்ற பூதபடை சூழ்ந்து மேவ
அயல் சேவ ற் கொடியிலங்க அன்னக்காவும்
வரிவுற்ற வள்ளியம்மன் தாய் தெய்வானை
வலமிடமா எழுந்தருளி மனது கூர்ந்து
தரிசித்து நான் போற்ற ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி.(8 )

மெய்யுற்ற பரஞ்சுடரே கருணை மூர்த்தி
வேதாந்த மெய்ப்பொருளே அமல நாதா
மையுற்ற கூர்விழியாள் வள்ளியம்மாள்
வசிகர சிகாமணியே வாவா என் முன்
கையுற்ற வேல்துலங்க இடை தள்ளாட
கனகபத சிலம்புதண்டை கலீரென் றேமுன்
மெய்யுற்ற நான் போற்ற ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (9 )

கடம்பணிந்த புயமிலங்க இடைதள்ளாடி
கரங்கள் பனிரெண்டிலங்க வயிரமுத்து
வடம்புனைந்த மார்புதனில் குழையிலங்க
மதிமுகமுஞ் சடையும் பளபளென்ன
நடம்புரிந்த பதந்துலங்க சதங்கை கொஞ்ச
நறுமலர்கள் கமகமென நாயே னுள்ளம்
திடம்புரிந்து எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (10 )

சர்வலோக நாயகனே விஞ்ஞை மூலத்
தலக்கொழுந்தே மெய்ஞானத் தாயாம் வள்ளி
சிருவருவு பரகரனே பரங்கிரியில் சுவாமி
அமர்ந்தவரே பாலசுப்ரமணிய தேவா
அருணகிரி நீலகண்டர் மனோன்மணியாள்
அருள்நிறைந்த கண்மணியே அழகே ஞானத்
திரவியமே என்குருவே சித்தே வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி (11 )

மந்திரஞ்சேர் மெய்ப்பொருளே ஞானமூர்த்தி
வாலையம்மாள் ஈன்றெடுத்த மரகதமே மூலம்
தந்திமுகன் தனைப்படைத்த சுவாமி நாதா
சகலசித்து மாடுகின்ற சற்குருவே ஞான
சுந்தரமே வள்ளிதெய்வ யானை நீயா
துரந்தரமே சௌந்தரமே துலங்க என்றன்
சிந்தை குடி கொண்டருளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (12 )

அறியாத ஏகவெளி வீதியாகி
அகண்டபரி பூரணமாய் வாசி யோகஞ்
சுழியாகிச் சுழிமுனையில் சூக்ஷமமாகித்
துலங்குகின்ற விந்துவம் நாதம் மாகி
ஒளியாகிப் பரஞ்சுடராய் உருவமாகி
ஒன்றிரண்டாய் மூன்றாக உலகமெங்கும்
தெளிவாக விளையாடும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (13 )

கைகொடுத்து மெள்ளமெள்ள வாவா என்றால்
கால் தூக்கி நடக்கநடை காட்டி என்னை
பையேனும் நடைவருமோ தூக்கினாலும்
படுத்திருந்து தூங்குமுன்னே பரனே உன்றன்
மெய்யருளே தான்காட்டி ஞானங் காட்டி
விந்தைமலர் தான்காட்டி வியாளக்கொண்டு
செய்தவர்ற்கு இதுசமயம் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (14 )

நலன்கள் பெற ஆறெழுத்தின் பொருளுங்காட்டி
நடுவில்நிற முதலெழுத்தின் பொருளுங்காட்டி
இலங்குகின்ற விதிவாசல் நாலுங்காட்ட்டி
சூழ்ந்துநின்ற நல்விர சொரூபங்காட்டி
அலங்குகின்ற தெய்வானை மயில் சேவலேந்தி
என்னிரு கண்விழி காணத்தோன்றி காட்டி
சதங்கைபதந்த் தனைக்காட்டும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (15 )

அன்பருள மேவுகின்ற நாயகனே வாவா
அரகரா ஆறுமுக சுவாமி வாவா
உம்பர்குடி வாழவந்த நாயகனே வாவா
ஒம்நமசிவாய குரு தேசிகனே வாவா
என்பெருமாள் என்ஸ்வாமி நாதா வாவா
எங்கோவே எனையாளும் நாயகனே வாவா
தென்பொதிகை முனி பணியும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (16 )

காரிலங்குங் கூந்தல் மின்னாள் மோகங் காட்டி
காமஇதழ் சுகங் காட்டி கருணை கூர்ந்து
நேரிலங்குந் தமிழ்காட்டி ஞானங் காட்டி
நினைவிலு மரியாத அருளுங் காட்டி
தாரிலங்குந் திருமார்பும் தோளுங் காட்டி
சண்முகமும் பன்னிருகை வேலுங் காட்டி
சீரிலங்கும் பதங்காட்டும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (17 )

ஆசையெனும் பேரின்ப பொருளுங் காட்டி
அஞ்செழுத்தின் ஆறெழுத்தின் அருளுங் காட்டி
பூசை செய்யும் விதிப்படியே முறையுங் காட்டி
பூரணமாய் மெய்ஞானப் பொருளுங் காட்டி
மாசிலாப் பரஞ்சோதி மணிபோல் எந்தன்
மனதிலொன்றும் பிரியாத மௌனங் காட்டி
தேசிகனே எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (18)

 உருப்படுத்தி யாளாகிச் செழுந்த பிள்ளை
ஓதுதற்கு இசைகாட்டி உள்ளொளிக்குள்
பொருத்தி ஐந்து புலன்களையு மொன்றாய்க் கூட்டி
பூரணமாய் மெய்ஞானப் பொருளுங் காட்டி
கருத்திலொன்றும் பிரியாமல் அருளுங் கூட்டி
கலவியின்ப சுகங் காட்டிக் கருணை கூர்ந்து
திருத்தி எனை ஆட்கொண்ட ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (19 )

நானுன்றன் பதமுழுதும் நம்பினேன் வா
நற்கதிதந் தாண்டருள்வாய் நாடி நீயும்
தானுந்தன் கிருபைசெய்து அருள் புரிவாய்
தமிழிசையும் விசையுமுற்றும் தந்து காப்பாய்
மானீன்ற பூங்கொடியாள் கானில் வள்ளி
மாத்தெள்ளி கொடுக்குந்தினை மாவின் மிக்க
தேனுண்ட கனிவாய ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (20 )

பாடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வாவா
பாக்கியமே மெய்ஞானப் பவுசே வாவா
நாடுகின்ற என்குருவே சாமி வாவா
நாதாந்த வசனியாள் பாலா வாவா
ஆடுகின்ற நாதாந்த பொருளே வாவா
ஆச்சர்ய அருள்புரியு அடியேனுள்ளே
தேடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (21)

உன்பதத்தை காணாத விழிதான் என்ன
உன்செயலைப் பாடாத வாய்தான் என்ன
அன்புடனே உனைத்துதியாச் சிந்தை எனா
அனுதினமும் சேவை செய்யாக் கைதான் என்ன
நம்பனை த்யானம் செய்யா மனந்தான் என்ன
நாயுடலை வளர்த்துமென்ன இருந்துமென்ன
தென்பொதிகை முனி பணியும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (22 )

சுப்பையா என் சுவாமி வாவா என்று
துதிக்கமிக அடிபணிந்து அழைத்தவேளை
அப்பையா என் முன்னே வருவதற்கு
ஆயாச மேது சொல்லு   அடியேன் உன்னை
எப்பையா மறந்திருந்தேன் குறைகள் ஏது
இதுவேது அறிந்ததில்லை எனக்கே அப்பாய்
செப்பையா வாய்திறந்து ஐயா பாலா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (23 )

விரிகமலோன் பரவுகின்ற விமலா வாவா
வேதாந்த மெய்ஞான விசாகா வாவா
புரிபுரவன் ஒளியேதம் பரனே வாவா
பரமகுரு சாமிகந்த சுவாமி வாவா
அரி நமசிவாய மெனும் பொருளே வாவா
ஆறெழுத்தி ல் அமர்ந்தருளும் ஆறுமுகனே வாவா
திரிபுரதாண்டவ ராய  ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (24)

அப்பனேவா சற்குருவாம் அண்ணலே வா
அங்குமிங்கு மாய்நிறைந்த அழகே வாவா
சுப்பையாவா முத்தையாவா துரந்தரா வா
சுந்தரியாள் ஈன்றெடுத்த துரையே வாவா
இப்பவா இங்குவா என்முன்னே வா
எளியேனைக் காத்தருளுஞ் சுவாமி வாவா
செப்பரிய முன்பொருளே என்னையா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (25 )

அலங்கார ரவிமதிசூழ் மலையும் சார்பும்
அமிர்தநதி சுத்திவருமல்லி தேசம்
இலங்குகின்ற மார்த்தூரில் நடுவே கம்பம்
எட்டிரண்டும் சார்த்திவைத்த வட்ட வீடு
துலங்குகின்ற மேல்வாசல் துணிந்த வீடு
தூக்கயிரு கால்பாதந் தொந்தோமென்று
சதங்கைபதந் தனைக்காட்டி ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (26)

அன்னையும்நீ தந்தையும்நீ என்னை யாளும்
சற்குரு நீ என்றழைத்தால் தமியேன் முன்னே
வந்ததினால் உன்குலத்தில் தாட்சி யாமோ
வாராமல் இருப்பதற்கு வழக்கே துண்டோ
எந்தனுக்கு சேனையுண்டோ உனைப்பிடித்து
எளியேன் முன் கொண்டுவர தொந்தையோ சொல்
செந்திநகர் தனில்வாழும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (27)
 
எடுத்தமுறை தவறாமல் இருக்க வேணும்
என்கிலுமுன் செந்தமிழைப் பாடவேணும்
தடுத்டோரை வாயடக்கச் செய்யவேணும்
சடாட்சரத்தில் உன்பெருமை காட்ட வேணும்
அடுத்தோர்க்கு உன்செயலைக் காட்டவேணும்
அனுதினமும் பாதமலர் சூட்ட வேணும்
திடத்துடன் எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (28)

முப்பொருளே தற்பரமே அகண்டவீதி
முடியிலங்கு கோமளமே முதலென் கோவே
அப்பனேவா என்று கொஞ்சி அழைப்பதல்லால்
அதட்டி அழைப்பதுண்டோ ஆர் தான் சொல்லு
இப்படியாய்த் திருப்புரகுன்ற நேசா
இறக்கமது கிருபை வைத்து எளியேன் உன் மேல்
செம்புதமிழ் கண்டுகந்து ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (29) 

என்மனது வாடுவது கண்டிருந்தும்
எவர்க்குவந்த விருந்தெனவே இருக்கலாமோ
   உன்மனது கல்லோதான் இரங்கொணாதோ
ஓதுதமிழ் கேட்கிலையோ உலகமெல்லாம்
தன்மனது நீயாமோ நான்தான் உன்மேல்
   நான்நினைத்த சித்துதந்து ரட்சி ஐயா
தென்பொதிகை முனி பணியும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (30)

நீவாவா காத்தருள எளியேன் உள்ளம்
நினைத்தவரம் அருள்புரிவாய் நீதானப்பா
தாய்வாவா சுவாமிநீ வாவா என்று
   தமியேன் கைக்குதவி தந்து ரட்சி ஐயா
 வாவா என்றழைத்தால் வந்தென் முன்னே
வாராதங்கி ருப்பதற்கு வழக்கேதுண்டோ
தேவாதி தேவாவா ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (31)

பரமனருள் நாயகனே வாவா வாலைப்
பார்வதியாள் பாலகனே  வாவா எங்கும்
சர்வவுயிர் நாயகனே வாவா சித்துத்
தமிழ்சொரியும் நாயகனே வாவா சித்துக்
கருணைபுரி நாயகனே வாவா என்னைக் 
காத்தருளும் நாயகனே வாவா என்றன்
  திருவருள்செய் நாயகனே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (32)

ஏனையா என்மீதில் மோடி வேண்டாம்
ஏழையல்லோ பாலனல்லோ எளியேன் நானும்
நானையா உன்றனிரு பாதம் போற்றி
நாதனேவா என்றழைத்தால் நாயேன் முன்னே
தானையா முன்தோன்றி அருள் புரிந்து
தற்காத்து ரட்சி வள்ளி தாயாள் தந்தை
தேனையா உண்டகனி ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (33)

நானென்ற வல்லபத்தைத் தீர்க்க வேணும்
நாடியான சுழுமுனையை நோக்க வேணும்
தானென்ற வன்பொருளை யாக்கவேணும்
சாகாமல் சற்றுமனங் கிடைக்கவேணும்
வாவென்ற ஒளி ஒளிதான் தோனவேனும்
வடிவேலு மயிலுநான் காணவேணும்
தேனுண்ட வாயானே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (34)       

பரந்துநின்ற என்மனத்தைத் திருத்த வேணும்
பலர்முகம் பார்த்துருகாமால் இருக்கவேணும்
உறைந் தெழுந்த ஆங்காரம் ஒடுங்கவேனும்
உண்மைதனில் மௌனமெல்லாம் அடங்க வேணும்
நிறைந்த சடாட்சரமுமனம் நாட வேணும்
நீங்காமற் கருணை பொழிந்தாட வேணும்
சிறந்திடவே இச்சணமே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (35)

ஆக்கைநரம் பெலும்புதசை உதிரம் சிந்தி
ஐம்புலன்களோடு முன்னே ஐயா உன்னை
பார்க்கவேணும் கண்குளிர முகங்களாரும்
பன்னிரண்டு புயமார்பும் கடம்புஞ் செய்கை
ஏற்க மயில் சேவல் வள்ளி தெய்வயானை
இலகுசக்தி வேல்வீர வாகுவீரர்
சீக்கிரமாய் எந்தன் முன்னே ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (36)      

ஆடுகின்ற பரஞ்சோதி மணியே நான்கும்
அருமறைக்கு வல்லவனே அமுதே ஆறு
வீடுநின்ற விளங்குபரஞ்  சுடரே ஞான
விளக்கொளியே வேதாந்த வேதமூர்த்தி
கூடநின்று விளையாட மனது கூர்ந்து
கோலமயில் மீதேறி வருவாய் என்று
தேடுகின்ற எளியேன்முன் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (37)         

நாவாலும் மனத்தாலும் தியானத் தாலும்
நம்மாலும் தமிழாலும் நாடி நாடி
வாவா என்றழைக்க வராதிருப்பதுண்டோ
மனதிரங்கி அடியேன்முன் வாவா சுவாமி
பாவாலே உனைத் துதித்து உலகத்தோர்கள்
பவுசுபெற் றெந்நாளு முன்றன் பாதங்கான

தேவாஎனும் ஐயா என் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (38)    

நாட்டமுற்றென் உன்மீதில் அன்புவைத்து
நானழைத்தால் வருவதற்கு நாயேன் முன்னே
கோட்டையுண்டோ வழியுண்டோ வழி கோணாதோ
கூப்பிட்டால் தமிழோசை செவி கேளாதோ
வாட்டமுற்று நான்மயங்க லாமோ நீதான்
மனதிரங்கி அடியேன்முன் மகிழ்ச்சி கூர்ந்து
தேட்டமுற்றேன் உன் பதத்தில் அன்பு வைத்து
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (39)  

ஏகமுற்ற பரஞ்சுடரே ஞானமூர்த்தி
எந்தையே பொதிகைவரை இருக்கும் நாதா
ஆகமுற்ற செழுங்கனியே ஏழைக்கேற்ற
அப்பனே எனை முழுதும் ஆண்ட சாமி
தாகமுற்று முனைத்தேடி வருந்துகின்ற
தமியன்முன் வரவேணும் சமயம் ஐயா
தேகசித்தி தந்தருளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (40)       

வச்சிரவேல் எதுமீறார் கரமும் தோளும்
மணிமுடியும் குண்டலமும் மயிலும் சேவல்
கச்சிடையும் வச்சிரமும் இலங்கு மார்பும்
காதிலிடுங் குண்டலமும் கையும் வேலும்
தத்சொரூபம் தனைக்காட்டி எளியேன் கண்கள்
தரித்துன்னி இசைத்ததெல்லாம் தருவாய் வேலா
தெட்சணாயனம்  பரவு ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (41)  

குருவருளை எந்நாளும் நோக்க வேணும்
கோபம் என்ற முனையதனைப் போக்க வேணும்
கருவியருள் மாய்கைவலை நீக்க வேணும்
காலடியே நாடிமனம் தூக்க வேணும்
அரகரா சிவசுப்ர மண்யா என்று
அனுதினமும் மலர்பதத்தை காண வேணும்
திருவருள்தந் தெனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (42)  

அடங்காமல் ஓடுகின்ற பேய் மனத்துக்
கருள்காட்டி அரவணைத்து அன்பாய் ஞான
வடம்பூட்டி பிடித்திறுக்கி அறிவேன்றோங்கு
மாணிக்கம் பத்தோடே வரிந்து சேர்த்து
உடன்கொள்ளும் படியா யாறெழுத்தால் மூட்டி
ஒடுங்கிநின்றேன் உளந்தனிலே உகந்தெந்நாளும்
திடங்காணும் படிக்கருள் செய் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (43)  

நாசிசெவி கண்மூக்குப் புருவம் ஐயா
நடுவிலொரு நாசியிடை பின் கலையான
நாசிஎனும் கழுமுனைக்கு நீங்காவட்டம்
வட்டமதில் மேல்வீடு மௌன வாசல்
ஒசைநடம் புரிந்தருளும் பதமும் காட்டி
உன்கிருபை செயல்காட்டி யுகந்தோம் என்று
தேசிகனே எனையாளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (44)  

உன்கிருபைசொல் எனக்குத் தரவும் வேணும்
ஊர்வழியே துணைஎனக்கு வரவும் வேணும்
என்கிலுமுன் செந்தமிழைப் பாடவேணும்
எதிர்த்தோரை வாயடக்கிப் போட வேணும்
  அங்கிலும் நீ நின்றுவிளை யாடவேணும்
    அனுதினமும் மலர்பதத்தைச் சூட வேணும்
செங்கையிலே வேலிலங்க ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (45)  

 மடம்பொருளே இதுஎன்ன மாய வாழ்வு
தான்பொருள் என்று எண்ணிலேன்  தமியே னுன்றன்
நடம்பொருளே தான்பாரா திருந்ததாகில்
நானுமெங்கே செல்வதினி நாயகனே சொல்
இடம்பொருள் ஏவல் தந்து  நான்தா னென்று
எந்நாளும் நினைத்தசித்தி இன்பம் காட்டி
திடம்பொருளே தந்ததுவும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (46)  

ஓசைகொண்ட சதங்கைதண்டை சிலம்பு கொஞ்ச
உகந்துநடம் புரிந்த பதமுன்னே காட்டி
ஆசைகொண்டு வருந்தியுனை நினைத்தேன் காண
ஐயனே வாவென்று அழைப்ப தல்லால்
ஏசிலம்பு கொண்டுமெள்ள இங்கு வாவென்
றேசவுனைப் பிடித்தடிக்க வெண்ணிலே காண்
தேசமெங்கும் நிறைந்தருளும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (47)     

நவிலுமென் செந்தமிழைப் பாடவேணும்
நாடோறு முன்பாதங் கொண்டாடவேணும்
ஏவல் செய்து தேவதைகள் நிற்க வேணும்
எந்நாளும் வீரசக்தி காக்க வேணும்
வசிலமாய் வள்ளியம்மை இடம் தெய்வானை
மலர்ப்பாதம் நீங்காமல் நிற்க வேணும்
சேவல்கொண்ட மயிலிலங்க ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (48)     

தங்கமுடி சூடுகின்ற பரனே போற்றி
சகலகலை வல்லவனே சுவாமி போற்றி
திங்கள்முடி நஞ்சுடையார் பாலா போற்றி
செகசூட்சி உமையவள் கண்மணியே போற்றி
செங்கைவடி வேலவனே கடம்பா போற்றி
செகமெல்லாம் உண்டருள் மால்மருகா போற்றி
மன்கைவேல்லி தெய்வானை மருளா போற்றி
மயூரகிரி தனிலுறைவாய் போற்றி போற்றி. (49 )

அத்தனருள் பரமகுரு சுவாமி வாவா
அங்கயற்கண் புத்திரனே ஐயா வாவா
முத்திதரும் குமரகுரு மூர்த்திவாவா
முத்தையாநால்வேதம் முதலே வாவா
பக்தர்மனதியானவள்ளி பங்காவாவா
பச்சைமயில் வாகனனே பரனே வாவா
சத்திமுனிவோர் பணியும் குகனே வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (50)

ஆதியாய் உலகமெங்கும் நிறைந்த ஜோதி
ஐம்பத்தோ ரட்சரத்தின் நிறைந்த ஜோதி
ஓதுகின்ற செந்தமிழன் குருவே ஜோதி
ஓங்காரமான எழுத் துகந்த ஜோதி
நீதியாய் சடாட்சரத்துள் ஆடும் ஜோதி
நிஷ்களா னந்தபர மான ஜோதி
சாதிபல பேதமெல்லாம் சமய ஜோதி 
சமயமிது வந்தென்னைக் காத்தருள்வாய் ஜோதி. (51 )

ஆறாறு ஐமூன்று கவிநான் சொல்லி
ஆராதனை செய்ய அடியேன் முன்னே
மாறாத வேலு பனிரெண்டு கையும்
வள்ளி தெய்வானையோடு மயில்மீதேறி
காறாதபதம் சிலம்பு கலீர் என்றோட
கலிகூத்து உந்தனிரு பாதம் போற்றி
தீராத நோய்தீர்க்கும் ஐயா வாவா
சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (52)

~ஓம்~

2 comments:

  1. மிக்க நன்றி. இவ்வளவு அருமையான ஸ்லோகம் இதற்கு முன் நான் அறியவில்லை. எங்கள் குழுவினருடன் படிப்பேன். 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Namaskaram Pynkili. Very happy to know that you have found this slokam here. Thank you so much for your kind acknowledgment :) Hari Aum.

      Delete

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita