பன்னிரு திருமுறைகளில் பஞ்சாக்ஷரம்
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையினுந் துணை அஞ்செழுத்துமே.
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும்
வஞ்ச மற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச் சிவாயவே.
இமயன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓதவல்லார்தமை நண்ணினால்
நியமத்தார் நினைவார்க்கும் இனியன் நெற்றி
நயனன் நாமம் நமச் சிவாயவே.
நந்தி நாமம் நமச் சிவாய வெனும்
சந்தை யாற்றமிழ் ஞான சம்பந்தன் சொல்
சிந்தையான் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.
மந்திர நான் மறையாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.
நல்லவர் தீயவர் எனாது நச்சினார்
செல்லல் எனச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன் தமர்கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.
- சம்பந்தர் தேவாரம் 3 ஆம் திருமுறை



